ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு....

ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு....



ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு....



ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு....


பொதுமக்களுக்கோ அரசாங்கத்துக்கோ பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் இழுத்து மூட ஜனாதிபதி அநுரகுமார திசாநாயக்க அதிரடி உத்தரவு பிறப்பித்துள்ளார்.


கடந்த காலங்களில் ஒரே அமைச்சின் கீழ் அல்லது வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே நோக்கத்திலான பல்வேறு அரச நிறுவனங்கள் உருவாக்கப்பட்டிருந்தன.

 

இலங்கை உரக் கூட்டுத்தாபனம் செயற்பாட்டில் இருக்கத்தக்கதாக எப்பாவல பொஸ்பேட் நிறுவனம் உருவாக்கப்பட்டமை அதற்கான சிறந்த எடுத்துக்காட்டாகும்.

 

பல்வேறு நோக்கங்கள் மற்றும் தேவைகளுக்காக பல ஆண்டுகளுக்கு முன்பு நிறுவப்பட்ட அவ்வாறான நிறுவனங்களைத் தொடர்ந்து பராமரிப்பதால், அரசாங்கம் கூடுதல் செலவுச் சுமையை ஏற்க வேண்டியுள்ளது என்று ஜனாதிபதி அநுர குமார திசாநாயக்க சுட்டிக்காட்டியுள்ளார்.

 

எனவே பயனற்ற அனைத்து நிறுவனங்களையும் மூடுவதற்கான செயற்பாடுகளை விரைவாக முன்னெடுக்குமாறு சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு ஜனாதிபதி உத்தரவிட்டுள்ளார்.

 

வெவ்வேறு அமைச்சுகளின் கீழ் ஒரே செயற்பாட்டிற்கான பல நிறுவனங்கள் இருப்பதால், திட்டங்களைச் செயல்படுத்துவதில் செயல்திறன் குறைபாடு ஏற்பட்டுள்ளது என்றும் ஜனாதிபதி குறிப்பிட்டுள்ளார்.






இலங்கை வரலாற்றில் பாரியளவில் உயர்ந்த இலவங்கப்பட்டை விலை...

 

இலங்கை வரலாற்றிலேயே இலவங்கப்பட்டை விலை கடந்த மே மாதம் பாரியளவில் அதிகரித்துள்ளதாக இலவங்கப்பட்டை மேம்பாட்டு திணைக்களம் தெரிவித்துள்ளது.

 

அதன்படி, ஒரு கிலோ இலவங்கப்பட்டை தற்போது ரூ. 5,000 முதல் 5,500 வரை விற்கப்படுவதாக திணைக்களம் கூறியுள்ளது.

 

அதன்படி, அல்பா தர இலவங்கப்பட்டை ஒரு கிலோ கிராமுக்கு ரூ.7,000 எட்டியுள்ளது.

 

அதிகரித்த தேவையும், ரூபாயின் மதிப்பில் ஏற்பட்ட ஏற்ற இறக்கமும் இலவங்கப்பட்டை விலை உயர்வுக்கு வழிவகுத்துள்ளன.

 

இந்த ஆண்டு இலவங்கப்பட்டை ஏற்றுமதி மூலம் 300 மில்லியன் அமெரிக்க டொலர் வருவாய் ஈட்ட நாடு இலக்கு நிர்ணயித்துள்ள நிலையில், இந்த சாதனை விலைகள் எட்டப்பட்டுள்ளதாக திணைக்களத்தின் நாயகம் ஜனக லிண்டர கூறியுள்ளார்.

 

கடந்த ஆண்டின் இதே காலகட்டத்துடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் ஐந்து மாதங்களில் இலவங்கப்பட்டை ஏற்றுமதி வருவாய் ரூ. 27 மில்லியன் அதிகரித்து இத்துறையில் வளர்ச்சியை சுட்டிக்காட்டியுள்ளதாகவும் அவர் மேலும் கூறியுள்ளார்.

 

 

 

 

 

உடுகஹபத்துவ கூட்டுறவுச் சங்கத் தலைவர்கள் இராஜினாமா...

 

அரசியல் அழுத்தங்களுக்கு மத்தியில் தம்மால் பதவிகளில் நீடிக்க முடியாது எனக் கூறி, ரைகம் உடுகஹபத்துவ பல்நோக்கு கூட்டுறவுச் சங்கத்தின் தலைவரும், உப தலைவரும் தமது பதவிகளை இராஜினாமா செய்துள்ளனர்.

 

இது தொடர்பாகச் சங்கத்தின் தலைவர் அனுப்பி வைத்துள்ள இராஜினாமா கடிதத்தில், கடுமையான அரசியல் தலையீடுகள் காரணமாகவே தாம் இந்த முடிவை எடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.

 

அவர் தனது கடிதத்தில் மேலும் தெரிவித்துள்ளதாவது: "கடந்த 2025 மார்ச் 2 ஆம் திகதி முதல் நிர்வாகப் பொறுப்பை ஏற்று, பல நிதி நெருக்கடிகள் மற்றும் சவால்களுக்கு மத்தியில் இச்சங்கத்தை களுத்துறை மாவட்டத்திலேயே முதலிடத்திற்கு கொண்டு வந்தோம். மேல் மாகாண ஆணையாளரின் பாராட்டையும் பெற்றோம்.

 

ஆனால், தற்போது சங்கம் கடுமையான அரசியல் தலையீடுகளுக்கு உள்ளாகியுள்ளது. இதற்கு உப தலைவர் ஆரம்பம் முதலே கடும் எதிர்ப்பை வெளியிட்டு வந்தார். எனினும், எங்களது கருத்துக்கள் எவராலும் ஏற்றுக்கொள்ளப்படவில்லை. இதனால் பணிப்பாளர் சபைக்குள்ளும் சிக்கல்கள் உருவாயின.

 

கூட்டுறவுத் துறை மற்றும் சட்டம் குறித்து முறையான புரிதல் கொண்ட முதிர்ச்சியடைந்த நபர்களின் வழிகாட்டல்களே எமக்குத் தேவையே தவிர, எதுவும் தெரியாதவர்களின் தலையீடுகள் அல்ல. அத்தகைய நபர்களின் முன்னிலையில் 'பொம்மைகளாக' செயற்பட்டு, தலைவர் பதவியின் கண்ணியத்தைக் குறைத்துக்கொண்டு எம்மால் பதவியில் நீடிக்க முடியாது. இதன் காரணமாகவே கடந்த 2026-07-06 முதல் தலைவர் பதவியிலிருந்து விலகுகிறேன்" என அவர் அக் கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

 

 

 


மேல் மாகாணத்தில் டெங்கு அபாயம் -  அடுத்த இரண்டு வாரங்கள் அதீத எச்சரிக்கை....

 

மேல் மாகாணத்தில் டெங்கு நுளம்பு குடம்பிகளின் அடர்த்தி கணிசமாக அதிகரித்துள்ளதால், அடுத்த இரண்டு வாரங்கள் டெங்கு பரவல் மிகவும் ஆபத்தான கட்டத்தை எட்டக்கூடும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.

 

டெங்கு முகாமைத்துவ நிபுணர் குழு உறுப்பினர், விசேட மருத்துவ நிபுணர் ஆனந்த விஜேவிக்ரம இதனைத் தெரிவித்துள்ளார்.

 

தற்போதைய டெங்கு பரவல் நிலைமை, 2017 ஆம் ஆண்டு ஏற்பட்ட கடுமையான டெங்கு பரவலை விடவும் மோசமானதாக மாறக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

நோயாளிகளின் எண்ணிக்கை வேகமாக அதிகரித்து வருவதால், மேல் மாகாண மருத்துவமனைகளின் கொள்ளளவு முழுமையாக நிரம்பியுள்ளதாகவும், சில மருத்துவமனைகளில் ஒரே கட்டிலில் இரண்டு அல்லது மூன்று நோயாளிகளுக்கு சிகிச்சை அளிக்க வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

இதேவேளை, பருவமழை மாற்றங்கள் மற்றும் காலநிலை மாற்றத்தின் தாக்கம் காரணமாக டெங்கு பரவல் அதிகரித்து வருவதாக ஸ்ரீ ஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தின் பேராசிரியர் நீலிகா மலவிகே தெரிவித்துள்ளார்.

 

அதிக வெப்பநிலை நிலவிய காலங்களில் நுளம்புகளின் இனப்பெருக்கம் குறைந்திருந்தாலும், தற்போது நிலைமை கவலைக்கிடமாக மாறியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இதற்கிடையில், நாட்டில் இதுவரை 66064 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளதுடன், உயிரிழப்புகளின் எண்ணிக்கை 46 ஆக உயர்ந்துள்ளது.

 

ஜூலை மாதத்தின் முதல் ஒன்பது நாட்களில் மட்டும் 10 ஆயிரத்து 685 டெங்கு நோயாளிகள் பதிவாகியுள்ளனர்.

 

 

 

 

 

இலங்கையில் குழந்தை பிறப்பு வீழ்ச்சி - குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை...

 

இலங்கையில் குழந்தை பிறப்பு வீதம் தொடர்ந்து குறைந்து வருவதால், குழந்தை பிறப்பு எண்ணிக்கையை அதிகரிக்கும் நோக்கில் குடும்பங்களுக்கு ஊக்கத்தொகை வழங்க அரசாங்கம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என வலியுறுத்தும் தனிநபர் பிரேரணை ஒன்று நாடாளுமன்றத்தில் முன்வைக்கப்பட்டுள்ளது.

 

இந்தப் பிரேரணையை ஐக்கிய மக்கள் சக்தி நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் பி பெரேரா முன்வைத்துள்ளார். 2018 ஆம் ஆண்டு முதல் இலங்கையின் வருடாந்திர குழந்தை பிறப்பு எண்ணிக்கை தொடர்ச்சியாக குறைந்து வருவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

 

இந்த நிலை தொடருமானால், எதிர்காலத்தில் இளைஞர் சனத்தொகை குறைவடைந்து, நாட்டின் பொருளாதார வளர்ச்சிக்கும் உற்பத்தித் திறனுக்கும் பாதகமான விளைவுகள் ஏற்படக்கூடும் என்றும் அவர் எச்சரித்துள்ளார்.

 

எனவே, குழந்தை பிறப்பை ஊக்குவிக்கும் வகையில் குடும்பங்களை கவரக்கூடிய நிதி ஊக்கத்திட்டத்தை அரசாங்கம் அறிமுகப்படுத்த வேண்டும் என பிரேரணையில் வலியுறுத்தியுள்ளார்.

 

 

 

 

 

வாகன இறக்குமதி கட்டுப்பாடுகள் சந்தையில் பாதிப்பை ஏற்படுத்தும் அபாயம்..

   

வாகன இறக்குமதிக்கு கட்டுப்பாடுகளை விதிப்பது சந்தையில் கடுமையான சிக்கல்களை ஏற்படுத்தும் அபாயம் உள்ளதாக பொருளாதார ஆய்வாளர் தனநாத் பெர்னாண்டோ தெரிவித்துள்ளார்.

 

நாட்டின் வாகனத் தேவை தற்போது பெருமளவில் பூர்த்தியாகியுள்ளதால், கடந்த ஆண்டுடன் ஒப்பிடும்போது இம்முறை வாகன இறக்குமதியால் கிடைக்கும் வரி வருமானம் குறையக்கூடும் என்றும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

 

எதிர்வரும் ஓகஸ்ட் 15ஆம் திகதிக்குப் பின்னர் வாகன இறக்குமதி கொள்கையை நீட்டிப்பது தொடர்பாக அரசாங்கம் எடுக்கும் தீர்மானம் முக்கியமானதாக இருக்கும் என அவர் தெரிவித்துள்ளார்.

 

மேலும், அதிக இறக்குமதி வரிகளை தொடர்ச்சியாக விதிப்பதை விட, அரச செலவினங்களை திறம்பட முகாமைத்துவம் செய்து பொருளாதார சீர்திருத்தங்களை விரைவுபடுத்துவதன் மூலம் நாட்டின் வரி வருவாயையும் பொருளாதார வளர்ச்சியையும் மேம்படுத்த முடியும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.



ஜனாதிபதி அநுரவின் அதிரடி உத்தரவு....




 

No comments

Theme images by fpm. Powered by Blogger.