சமூக ஊடகப் பயனர்களை குறிவைத்து…

சமூக ஊடகப் பயனர்களை குறிவைத்து

 



சமூக ஊடகப் பயனர்களை குறிவைத்து…




சமூக ஊடகப் பயனர்களை குறிவைத்து

Facebook Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram போன்ற சமூக ஊடகங்களை பயன்படுத்தி மேற்கொள்ளப்படும் பணப் பறிப்பு  மோசடிகள்,

 

மீண்டும் அதிகரித்து வருவதாக இலங்கை கணினி அவசர பதிலளிப்பு அணி (SLCERT) எச்சரிக்கை விடுத்துள்ளது.

 

அண்மைய வாரங்களில் பலர் இது தொடர்பாக முறைப்பாடுகளை பதிவு செய்துள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

ஆரம்பகட்ட விசாரணைகளின் படி, இந்த மோசடிகளில் இந்தியாவைச் சேர்ந்த குழுக்கள் ஈடுபட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகின்றது.

 

அதேவேளை, அண்மைய சம்பவங்களில் பாதிக்கப்பட்டவர்களிடம் பணத்தை இலங்கையிலுள்ள தனிப்பட்ட வங்கி கணக்குகளுக்கு அனுப்புமாறு கூறப்பட்டுள்ளதால், இலங்கையர்களின் தொடர்பும் இருக்கலாம் என்ற சந்தேகம் எழுந்துள்ளது.

 

இந்த மோசடி பொதுவாக இளம் பெண்ணின் Instagram கணக்கிலிருந்து "Hi" என்ற எளிய செய்தியுடன் தொடங்குகிறது.

 

சில நாட்கள் நம்பிக்கையை ஏற்படுத்திய பின்னர், கவர்ச்சியான புகைப்படங்களை அனுப்பி WhatsApp காணொளி அழைப்பிற்கு அழைக்கின்றனர்.

 

அதன்பின், பாதிக்கப்பட்டவர்களை ஆடையின்றி தோன்றவோ அல்லது தனிப்பட்ட காட்சிகளில் ஈடுபடவோ தூண்டி, அதன் திரைப் படங்களை (Screenshots) பதிவு செய்து, குடும்பத்தினர் மற்றும் நண்பர்களுக்கு அனுப்புவதாக மிரட்டி பணம் பறிக்கின்றனர்.

 

ஆரம்பத்தில் ரூ.5,000 முதல் ரூ.10,000 வரை கோரப்படும் தொகை, பின்னர் இலட்சக்கணக்கான ரூபாயாக அதிகரிக்கப்படுவதாக SLCERT தெரிவித்துள்ளது.

 

குடும்பத்தினரையும் உறவினர்களையும் சமூக ஊடகங்களில் முன்கூட்டியே நண்பர்களாக இணைத்துக்கொண்டு, பாதிக்கப்பட்டவர்களுக்கு கூடுதல் அழுத்தம் கொடுப்பதும் இந்த மோசடியின் புதிய யுக்தியாகும்.

 

எனவே, Messenger, Instagram, WhatsApp மற்றும் Telegram பயன்படுத்தும் அனைவரும் மிகுந்த அவதானத்துடன் இருக்க வேண்டும் என்றும்,

 

தெரியாத நபர்களுடன் தனிப்பட்ட தகவல்கள் அல்லது புகைப்படங்களை பகிர வேண்டாம் என்றும்,

 

சந்தேகத்திற்கிடமான சம்பவங்கள் ஏற்பட்டால் உடனடியாக SLCERT அல்லது பொலிஸாரை தொடர்புகொள்ள வேண்டும் என்றும் SLCERT வலியுறுத்தியுள்ளது.

 

 

 

 

சீரற்ற வானிலை

மோசமான வானிலை காரணமாக, விரைவில் நடைபெறவுள்ள 5ஆம் தர புலமைப்பரிசில் பரீட்சை மற்றும் A/L பரீட்சை தொடர்பாக   (05.08.2026) விசேட கலந்துரையாடல் நடைபெறவுள்ளது.

 

இந்தக் கலந்துரையாடலில் வானிலை ஆய்வு திணைக்களம், அனர்த்த முகாமைத்துவ மையம் மற்றும் பரீட்சைகள் திணைக்களம் ஆகியவற்றின் பிரதிநிதிகள் பங்கேற்கவுள்ளனர்.

 

தற்போதைய மழை நிலைமையை முன்னிட்டு, பரீட்சைகளை சீராக நடத்துவதற்கான எதிர்கால நடவடிக்கைகள் குறித்து இதில் விவாதிக்கப்படவுள்ளதாக வானிலை ஆய்வு திணைக்களத்தின் பணிப்பாளர் நாயகம் அஜித் விஜேமான்ன தெரிவித்துள்ளார்.

 

 

 

 

ஜூலையில் வேலைவாய்ப்புக்காக

இந்த ஆண்டின் ஜூன் மாதத்துடன் ஒப்பிடுகையில், ஜூலை மாதத்தில் வெளிநாட்டு வேலைவாய்ப்புக்காகச் சென்ற இலங்கையர்களின் எண்ணிக்கை 4.84 சதவீதம் அதிகரித்துள்ளதாக,

 

இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகம் தெரிவித்துள்ளது.

 

இதன்படி, 2026 ஜூலை மாதத்தில் 25,622 இலங்கையர்கள் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றுள்ளதுடன்,

 

இது இந்த ஆண்டில் ஒரே மாதத்தில் பதிவான அதிகபட்ச எண்ணிக்கையாகக் கருதப்படுகிறது.

 

ஜூன் மாதத்தில் 24,440 பேர் வெளிநாட்டு வேலைவாய்ப்புகளுக்காகச் சென்றிருந்தனர்.

 

இஸ்ரேல், தென் கொரியா மற்றும் ஜப்பான் ஆகிய நாடுகளுடன் அரசாங்கம் எட்டியுள்ள புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் காரணமாக,

 

அந்நாடுகளில் வேலைவாய்ப்புகளைப் பெறுவதில் இலங்கையர்களிடையே ஆர்வம் அதிகரித்துள்ளதாகவும் பணியகம் குறிப்பிட்டுள்ளது.

 

இதற்கமைய, ஜூலை மாதத்தில் இஸ்ரேலுக்கு 2,521 பேரும், தென் கொரியாவுக்கு 1,618 பேரும், ஜப்பானுக்கு 79 பேரும் சென்றுள்ளனர்.

 

அத்துடன், ஜப்பானில் உற்பத்தி, கட்டுமானம், செவிலியர் பராமரிப்பு மற்றும் விவசாயத் துறைகளில் வேலைவாய்ப்புகளைப் பெற்ற,

 

14 இளைஞர், யுவதிகளுக்கு நேற்று (03) இலங்கை வெளிநாட்டு வேலைவாய்ப்புப் பணியகத்தில் வைத்து விமான பயணச்சீட்டுகள் வழங்கி வைக்கப்பட்டன.

 

இதேவேளை, இந்த ஆண்டின் ஜனவரி முதல் ஜூன் வரையிலான ஆறு மாத காலத்தில் புலம்பெயர் தொழிலாளர்களால் 4.6 பில்லியன் அமெரிக்க டொலர் வெளிநாட்டு வருவாய் நாட்டிற்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

 

 

 

 

வெளிநாட்டு வேலைவாய்ப்பு தருவதாக கூறி

வெளிநாட்டு வேலைவாய்ப்பு பெற்றுத் தருவதாகக் கூறி பெண்ணொருவரிடம் இருந்து ரூ.66,44,000 பணத்தை இணையவழி வங்கி பரிவர்த்தனைகள் மூலம் மோசடி செய்ததாகக் கூறப்படும்,

 

21 வயதுடைய சந்தேகநபர் கணினி குற்றப்புலனாய்வு பிரிவின் வடமேல் மாகாண பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

 

பங்கதெனிய, குருக்குப்பனையைச் சேர்ந்த 28 வயது பெண் அளித்த முறைப்பாட்டின் அடிப்படையில் மேற்கொள்ளப்பட்ட விசாரணைகளில்,

 

அம்பிளாந்துறையைச் சேர்ந்த சந்தேகநபர் அடையாளம் காணப்பட்டு, கடந்த ஆகஸ்ட் 3 மாலை கைது செய்யப்பட்டதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.

 

சந்தேகநபர் நேற்று (04) சிலாபம் நீதவான் நீதிமன்றில் முன்னிலைப்படுத்தப்பட்டதுடன், மேலதிக விசாரணைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.

 

 

 

 

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள்...

காலாவதியான ஆயுர்வேத மருந்துகள் மற்றும் கட்டாய லேபிள் தகவல்கள் இல்லாத அழகுசாதனப் பொருட்களை விற்பனைக்காக சேமித்து வைத்திருந்த குற்றச்சாட்டில்,

 

கொழும்பு 13-ஐச் சேர்ந்த நிறுவனம் ஒன்றுக்கும் அதன் பணிப்பாளருக்கும் மொத்தமாக ரூ.1 இலட்சம் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது.

 

நுகர்வோர் அலுவல்கள் அதிகார சபை தாக்கல் செய்த வழக்கை விசாரித்த மாளிகாகந்த நீதவான் நீதிமன்றத்தில், நிறுவனம் மற்றும் அதன் பணிப்பாளர் மீது சுமத்தப்பட்ட ஐந்து குற்றச்சாட்டுகளையும் ஒப்புக்கொண்டதைத் தொடர்ந்து இந்த அபராதம் விதிக்கப்பட்டது.

 

கடந்த மே 20 ஆம் திகதி மேற்கொள்ளப்பட்ட திடீர் சோதனையில், 640-க்கும் மேற்பட்ட காலாவதியான ஆயுர்வேத மருந்துகளும்,

 

280-க்கும் அதிகமான விதிமுறைகளை பின்பற்றாத அழகுசாதன மற்றும் பிற பொருட்களும் கைப்பற்றப்பட்டிருந்தன.

 

மேலும், கைப்பற்றப்பட்ட அனைத்து மருந்துகள் மற்றும் அழகுசாதனப் பொருட்களையும் உடனடியாக அழிக்க நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

 

 

 

 

2026 ஆம் ஆண்டின் ஜூலை முதல் செப்டம்பர் வரையிலான காலப்பகுதியில்

2026 ஆம் ஆண்டின் 3 ஆம் காலாண்டுக்கான மின்கட்டணத்தில் திருத்தம் மேற்கொள்ள வேண்டிய அவசியம் இல்லை என,

 

இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு (PUCSL) தெரிவித்துள்ளது.

 

மின்கட்டணத்தை மீளாய்வு செய்வது தொடர்பில் மேற்கொள்ளப்பட்ட மதிப்பீடுகளின் அடிப்படையில்,

 

தற்போதைய மின்கட்டண கட்டமைப்பில் மாற்றம் செய்ய வேண்டிய தேவை இல்லை என ஆணைக்குழு குறிப்பிட்டுள்ளது.

 

மின்சார உற்பத்தி செலவுகள், வருமானம், நுகர்வு நிலை மற்றும் மின்சாரத் துறையின் தற்போதைய நிலைமைகள் உள்ளிட்ட பல்வேறு காரணிகளை கருத்தில் கொண்டு இந்த மதிப்பீடு மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.

 

இதன்படி, 2026ஆம் ஆண்டின் ஜூலை மாதம் முதல் செப்டம்பர் வரையான 3 ஆம் காலாண்டு காலப்பகுதிக்கான மின்கட்டணங்களில் மாற்றம் இடம்பெறாது என எதிர்பார்க்கப்படுகிறது.

 

மின்கட்டண திருத்தம் தொடர்பான தீர்மானங்களை மேற்கொள்ளும் போது,

 

நுகர்வோர் நலன் மற்றும் மின்சார விநியோகத்தின் நிலைத்தன்மை ஆகியவை முக்கியமாக கருத்தில் கொள்ளப்படுவதாக இலங்கை பொதுப்பயன்பாடுகள் ஆணைக்குழு தெரிவித்துள்ளது.

 


சமூக ஊடகப் பயனர்களை குறிவைத்து…



No comments

Theme images by fpm. Powered by Blogger.